திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.34 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
பண் - கொல்லி
வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.
1
வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு
பொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன்
மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடஞ்
செறியுளார் புறவணி திருமுது குன்றமே.
2
ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமை
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடந்
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.
3
உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும்
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினார் ஒலியென வோங்குமுத் தாறுமெய்த்
திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே.
4
கடியவா யினகுரல் களிற்றினைப் பிளிறவோர்
இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடஞ்
செடியதார் புறவணி திருமுது குன்றமே.
5
கானமார் கரியின்ஈர் உரிவையார் பெரியதோர்
வானமார் மதியினோ டவர்தாம் மருவிடம்
ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடுந்
தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.
6
மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
அஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே.
7
காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினை
ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடஞ்
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.
8
ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்
பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி
ஏடினார் மலர்மிசை அயனுமை லிருவருந்
தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.
9
மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத்
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.
10
திண்ணினர் புறவணி திருமுது குன்றரை
நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப்
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.99 திருமுதுகுன்றம் - திருமுக்கால்
பண் - சாதாரி
முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்கள் உலகில்ஆ வாரே.
1
மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறும் நலமே.
2
முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே.
3
முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
திருவொடு தேசினர் தாமே.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் மறைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் மறைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
7
முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே.
8
முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்
றியன்றவ ரறிவரி யீரே
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
பயன்றலை நிற்பவர் தாமே.
9
மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் தேரைக்காய்ந் தீரே
கட்டமண் தேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே.
10
மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com